சென்னை பள்ளிக்கரணையில் விதிமீறல் கட்டடத்துக்கு சீல்
பள்ளிக்கரணை அருகே விதிகளை மீறிக் கட்டப்பட்டு வந்த 4 மாடிக் கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் புதன்கிழமையன்று சீல் வைத்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்தி:-
பிளாட் எண்.6, வி.ஜி.பி.ராஜேஷ் நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை கிராமம் என்ற முகவரியில் புத்தக அச்சுத் தொழில் நடத்துவதற்காக, தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக, அதன் உரிமையாளர் 3 மற்றும் நான்காம் தளங்களைக் கொண்ட வணிகப் பயன்பாட்டுக் கட்டடம் கட்டி வந்தார். இது குறித்து சி.எம்.டி.ஏ தரப்பிலிருந்து அதன் உரிமையாளருக்கு பணி நிறுத்த அறிவிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அறிவிக்கை கிடைத்த பின்னரும், கட்டடத்தை மாற்றியமைக்காமல் விதிமுறைக்கு புறம்பாகவே கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதி மீறிக் கட்டப்பட்ட 3 மற்றும் 4-வது தளங்கள் புதன்கிழமையன்று பூட்டி சீல் வைக்கப்பட்டன.