தினமலர் 20.01.2010
தத்தனேரியிலும் நவீன எரிவாயு தகன மேடை : மாநகராட்சி கமிஷனர் தகவல்
மதுரை: “”மதுரை கீரைத்துறை மூலக்கரையை தொடர்ந்து, தத்தனேரி சுடுகாட்டிலும் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது,” என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார். கீரைத்துறை மூலக்கரையில், மாநகராட்சி சார்பில், 3.12 ஏக்கரில், ரூ.2.8 கோடி செலவில், “அஞ்சலி‘ என்ற பெயரில், நவீன எரிவாயு தகன மேடை அமைக் கப்பட்டுள்ளது. இதை பத்து ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பொறுப்பை மதுரை ரோட்டரி மிட்–டவுன் ஏற்றுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. திட்ட ஒருங்கிணைப் பாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் பேசியதாவது :
உடலை எரிக்கும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்காது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சான்று அளித்துள்ளது. சாம்பல் மீது தண்ணீர் தெளித்து, அதை தண்ணீருடன் கலந்து, மீண்டும் மறுசுழற்சி செய்து நீருற்றுக்கு பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள இரு தகன மேடையில், தினமும் தலா 24 உடல் களை எரிக்கலாம். கூடுதலாக ஒரு தகன மேடை தயாராக உள்ளது. தத்தனேரி சுடுகாட்டிலும், இதுபோன்ற எரிவாயு தகன மேடை அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது, என்றார். நன்மாறன் எம்.எல்.ஏ., மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல், ரோட்டரி கவர்னர் புருஷோத்தமன், மிட்–டவுன் தலைவர் ராமபாரதி, செயலாளர் மதன் பங்கேற்றனர். என்னென்ன வசதிகள் கிடைக்கும்: ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற்ற இந்த சுடுகாட்டில் தியான மண்டபம், அஞ்சலி மண்டபம், மொட்டை போட்டு இறுதிச்சடங்கு செய்ய மண்டபம், இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை, குளியலறை, பார்க்கிங் வசதி உண்டு. ரம்மியமான இசையை கேட்கும் வசதியும் உண்டு. காஸில் 40 நிமிடத்தில் பிணத்தை எரித்து, அஸ்தி கொடுக்கப்படும். குடிபோதையில் இருப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு சுடுகாடு வளாகத்திற்குள் அனுமதியில்லை. மூன்று நாட்களுக்குள் இறப்புச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்கின்றனர்.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நவீன மயானம் செயல்படும். இங்கு உடலை எரிக்க, 0452 – 209 0900ல் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால் வீடு தேடி ஆம்புலன்ஸ் வரும். “இயற்கை மரணம்‘ என்று டாக்டர் சான்று இருந்தால் மட்டுமே இங்கு உடலை எரிக்க முடியும். உடலை எடுத்து வருவது முதல் அஸ்தியை கொடுப்பது வரை கட்டணம் 1350 ரூபாய். மதுரை, மேலூர், நத்தம், காரியாபட்டி, திருமங்கலம், திருப்புவனம், செக்கானூரணி, உசிலம் பட்டி, வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வசதியை பெறலாம். பத்து கி.மீ., அப்பால் இருந்து, ஆம்புலன்சில் உடலை கொண்டு வர, கி.மீ.,க்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இங்கு எட்டு வெப் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள்,www.RotaryAnjali.com என்ற வெப்சைட்டில் இறுதி சடங்கை காணலாம்.