தினமலர் 13.10.2010
தரமற்ற குடிநீர் பாக்கெட்கள் அழிப்பு
அம்பத்தூர்
: அம்பத்தூர் நகராட்சி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட குடிநீர் பாக்கெட்களை, நகராட்சி கமிஷனர் முன்னிலையில் சுகாதார துறையினர் அழித்தனர்.அம்பத்தூர், ஆவடி நகராட்சி பகுதிகள், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள், குளிர்பான கடைகளில் தரமற்ற, சுகாதாரமில்லாத குடிநீர் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத, இந்த பாக்கெட் குடிநீரை அருந்துபவர்களுக்கு நோய்கள் பரவுகின்றன.இது குறித்து “தினமலர்‘ நாளிதழில் செய்தி வெளியானது. அம்பத்தூர் நகராட்சி கமிஷனர் ஆஷிஷ் குமார் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் டாக்டர் மணிமாறன் தலைமையில் சுகாதார துறையினர் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.வரதராஜபுரம், ரயில்வே ஸ்டேஷன் சாலை, அம்பத்தூர் ஓ.டி., பஸ் நிலையம், கள்ளிக்குப்பம், பாடி, மண்ணூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த குளிர்பான கடைகள், டாஸ்மாக் பார்களில் சோதனை நடந்தது.ஐ.எஸ்.ஐ., முத்திரையில்லாதவை, காலாவதியான குடிநீர் பாக்கெட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. நகராட்சி தலைவர் சேகர், கமிஷனர் ஆஷிஷ் குமார் முன்னிலையில், நகராட்சி வாகனம் மூலம் அழிக்கப்பட்டது.தரமற்ற குடிநீர் பாக்கெட்களை விற்பனை செய்த கடைக்காரர்கள், பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.