தினமணி 05.02.2010
திருவள்ளூரை மாநகராட்சியாக்க கோரி தீர்மானம்
திருவள்ளூர், பிப். 4: திருவள்ளூர் நகராட்சியைச் சுற்றியுள்ள ஏனைய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை இணைத்து திருவள்ளூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இங்கு வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
÷திருவள்ளூரில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நகர்மன்றக் கூடத்தின் திறப்பு விழா மற்றும் நகர்மன்றத்தின் சிறப்புக் கூட்டம் அதன் தலைவர் பொன். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ÷
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.பி. சிவாஜி புதிய நகர்மன்றக் கூடத்தை திறந்துவைத்துப் பேசினார். இதைத் தொடர்ந்து நகர்மன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
÷திருவள்ளூர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தெருவோரக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக காகிதத்தால் தயாரிக்கப்பட்ட பைகள், வாழை இலை, கோப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.