தொடுதிரை கணினி அமைக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தொடுதிரை கணினி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை நகராட்சியில் சொத்து வரி, தண்ணீர் வரி, நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை, தொழில் வரி உள்ளிட்ட விபரங்கள் அறிவதற்கு மக்கள் நகராட்சியில் காத்துக் கிடக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த விபரங்களை விரைவாக அறிந்து கொள்வதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடுதிரை கணினியை கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலும் அமைக்க வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு சிரமமும், அலுவலர்களின் பணிச்சுமையும் குறையும். இதுகுறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், ஏற்கெனவே காரைக்குடி,சிவகங்கை போன்ற நகராட்சி அலுவலகங்களில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொது மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். நகராட்சி கணினியில் உள்ள தகவல்களை அப்படியே தொடுதிரை கணினிக்கு மாற்றம் செய்வது தற்போதய கணினி உலகத்தில் மிகவும் எளிதாகும். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அலுவலக வளாகத்தில் தொடுதிரை கணினி அமைக்க வேண்டும் என்றார்.