தினமணி 07.04.2010
நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கூடுதல் மண்ணெண்ணெய்
பெரம்பலூர், ஏப். 6: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள எரிவாயு இணைப்பு இல்லாத புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மார்ச் மாதம் கூடுதலாக 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. அதேபோல, ஏப்ரல் மாதமும் 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு பெறப்பட்ட புதிய விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு எரிவாயு இணைப்பு இல்லாமல் இருந்தால் மாதம் ஒன்றுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஏப்ரல் மாதத்துக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், லெப்பைகுடிகாடு, அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு மேற்கொண்டு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதம் மட்டும் 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும். மேலும், இந்தப் பகுதிகள் தவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு எரிவாயு இணைப்பு உள்ள புதிதாக வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.