தினமலர் 22.02.2010
நகர்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன் : கலெக்டர் சுகந்தி தகவல்
புதுக்கோட்டை:கலெக்டர் சுகந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு@ நகர்புற ஏழை மக்களுக்கு மானிய வட்டியில் வீடு கட்ட கடன் உதவி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மாத வருமானம் ரூபாய் 3ஆயிரத்து300 வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், மாத வருமானம் 3ஆயிரத்து301 ரூபாய் முதல் 7ஆயிரத்து300 ரூபாய் வரை குறைந்த வருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூபாய் ஒரு லட்சமும், குறைந்த வருமான பிரிவினருக்கு ரூபாய் 1.60லட்ச ரூபாயும் கடன் வழங்கப்படும். கடன் தொகை 15 முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திரும்ப செலுத்த வேண்டும். கடன் தொகை தேசிய வங்கிகளில் மூலம் பெற்று தரப்படும். கடன்தொகைக்கு வட்டி விகிதத்தில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும். நடுத்தர வருமான பிரிவினர்களுக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 40 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதற்குரிய பட்டா உரிமையை பெற்று இருக்க வேண்டும். அரசின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ளவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு திருச்சி வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.