தினத்தந்தி 04.12.2013
நெல்லை டவுனில் பூங்காவை சீரமைக்க வேண்டும் மேயரிடம், பொது மக்கள் கோரிக்கை

நெல்லை டவுனில் உள்ள பூங்காவை சீரமைக்க
வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நெல்லை மாநகராட்சி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நேற்று பல்வேறு பகுதி பொதுமக்கள்
கோரிக்கை மனுக்களை மேயர் விஜிலா சத்தியானந்திடம் கொடுத்தார்கள். நெல்லை
டவுன் கோடீசுவரன் நகரை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் மற்றும் பொது மக்கள்
கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:–
பூங்கா சீரமைப்பு
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கோடீசுவரன்
நகர் 10–வது குறுக்குத்தெருவில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள சுமார் 7
ஆயிரம் சதுர அடி இடத்தில் கருவேல மரங்களும், புதர்களும்
மண்டிக்கிடக்கின்றன. இந்த பகுதி விஷப்பாம்புகளின் உறைவிடமாக உள்ளது. எனவே
இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி, பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று
கூறிஉள்ளனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மேயரிடம் கொடுத்த
மனுவில், நெல்லை 41–வது வார்டு நயினார்குளம் தெருவில் பாதாள சாக்கடை
பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர நிரப்பப்படாமல், போதுமான
வாறுகால் வசதி இல்லாமல் கழிவுநீர் மழை நீருடன் கலந்து வீதியில் தேங்கி
உள்ளது. எனவே இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
சிமெண்டு சாலை
11–வது வார்டு கவுன்சிலர் வசந்தா
ஜெகதீசுவரன் கொடுத்த மனுவில், திம்மராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவில்
சிமெண்டு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது
பாதி சிமெண்டு சாலையும், மற்றொரு பாதி தார் ரோடும் அமைக்க வேண்டும். இதை
தவிர்த்து முழுவதும் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும்’ என்று மனுவில்
கூறப்பட்டு உள்ளது.
நெல்லை வண்ணார்பேட்டை சலவையாளர் சமுதாய
நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வண்ணார்பேட்டை 9–வது வார்டுக்கு உட்பட்ட
தங்கம்மன் கோவில் அப்பர் சுவாமிகள் தெருவில் மாநகராட்சி சார்பில் சிமெண்டு
சாலை போடப்பட்டது. அங்கு தனிநபர் ஆக்கிரமிப்பால் சாலை முழுமையாக
போடப்படாமல் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோவிலுக்கு செல்லும் ரோட்டை
பொது மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு
உள்ளது.