தினத்தந்தி 27.08.2013
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வாகன காப்பகத்தில் “ஸ்மார்ட் கார்டு” முறை மேயர் விஜிலா சத்யானந்த் தொடங்கி வைத்தார்
நெல்லை புதிய பஸ் நிலைய வாகன காப்பகத்தில் “ஸ்மார்ட் கார்டு“ முறையை மேயர் விஜிலா சத்யானந்த் நேற்று தொடங்கி வைத்தார்.
வாகன காப்பகம்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் வாகன
காப்பகம் செயல்பட்டு வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகள் தங்கள் வாகனங்களை
அங்கு நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால் ஏராளமான பயணிகள் பயன்பெற்று
வருகிறார். இந்த வாகன காப்பகம் மாநகராட்சி நிர்வாகத்தின் நேரடி
கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒப்பந்த
அடிப்படையில் விடப்பட்டு உள்ளது.
கட்டணம்
இந்த வாகன காப்பகத்தில் சைக்கிளுக்கு ரூ.3, மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5,
ஆட்டோவுக்கு ரூ.10, காருக்கு ரூ.15, வேனுக்கு ரூ.20 என வசூல்
செய்யப்படுகிறது. இந்த வாகன காப்பகத்தில் ஏற்கனவே “ஸ்மார்ட் கார்டு“ முறை
அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது ஸ்மார்ட்
கார்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கார்டு
நவீனமுறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக விழா நெல்லை புதிய பஸ்
நிலைய வாகன காப்பகத்தில் நேற்று நடந்தது. மேயர் விஜிலா சத்யானந்த தலைமை
தாங்கி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை
மண்டல தலைவர் எம்.சி.ராஜன், மாநகராட்சி பொறியாளர் ஜெய்சேவியர், உதவி
செயற்பொறியாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கம்ப்யூட்டரில் பதிவு
பயணிகளுக்கு, ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் நேரம் கம்ப்யூட்டரில் பதிவாகி
விடும். ஒரு மாதத்துக்கூட கார்டு வாங்கிக் கொள்ளலாம். ஒருவேளை கார்டு தவறி
விட்டால், வண்டி எண் மூலம் கம்ப்யூட்டரில் பதிவை கண்டுபிடித்து விடலாம்.
ஆனால், தொலைந்த ஸ்மார்ட் கார்டுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.