பிறப்பு–இறப்பு சான்றிதழ்களுக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
மதுரை மாநகராட்சியில் பிறப்பு–இறப்பு தொடர்பான சான்றிதழ்கள் பெறுவதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என கமிஷனர் நந்தகோபால் கூறியுள்ளார்.
பிறப்பு–இறப்பு சான்றிதழ்
மதுரை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மதுரை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கேட்டு நாள்தோறும் 200 முதல் 300 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில் 50–க்கும் மேற்பட்டவை சரியான முறையில் பூர்த்தி செய்யப்படாமலும், தாய்–தந்தை பெயர் மாற்றம், குழந்தையின் பிறந்த தேதியில் மாறுபாடு போன்ற காரணங்களால் பிறப்பு சான்றிதழ் அளிக்க முடியாதநிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற காரணங்கள் இல்லாத விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்கள் சுகாதார ஆய்வாளரின் கையொப்பத்துடன் உடனுக்குடன் அன்றைய தினம் மாலையிலேயே வழங்கப்படுகின்றன. எச்சரிக்கை
மேலும் பிறப்பு சான்றுகளை உடனுக்குடன் வழங்கும் பொருட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெய வரும் பொதுமக்கள் தாங்களாகவே மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தகவல் மையத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரடியாகவே கொடுக்கலாம்.
இதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம். அதையும் மீறி இடைத்தரகர்கள் உங்களை வற்புறுத்தினால் உடனடியாக புகார் செய்யலாம். புகாரின்பேரில் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.