தினமணி 05.09.2013
தினமணி 05.09.2013
பெங்களூரு மாநகராட்சி மேயராக சத்தியநாராயணா போட்டியின்றித் தேர்வு
பெங்களூரு மாநகராட்சி மேயராக பாஜகவைச் சேர்ந்த
பசவனகுடி வார்டு உறுப்பினர் பி.எஸ்.சத்தியநாராயணா போட்டியின்றித்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெங்களூரு மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் பதவிக்கு புதன்கிழமை
தேர்தல் நடைபெற்றது. மேயர் பதவி பொது பிரிவுக்கும், துணை மேயர் பதவி
பழங்குடியின மகளிருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில், பெங்களூரு பசவனகுடி வார்டு பாஜக உறுப்பினர் பி.எஸ்.சத்தியநாராயணா
போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த பேட்டராயணபுரா வார்டு உறுப்பினர் இந்திராவும்
போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேயராகப் பதவி ஏற்ற சத்தியநாராயணா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பெங்களூரு மாநகராட்சி மேயராக என்னைத் தேர்ந்தெடுக்க காரணமான பாஜக பொதுச்
செயலாளர் அனந்த்குமார், முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், பாஜகவைச்
சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி.
பெங்களூரு மாநகராட்சியில் பாஜகவைச் சேர்ந்த மேயர்கள் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளனர்.
என்றாலும், பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இதனைப் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில், சாலைகள்
மேம்படுத்தப்படும். ஏரிகள் தூர் வாரப்படும். குடிநீர், மின்சாரம்
தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி, விளம்பரங்கள் மூலம்
மாநகராட்சியின் வருவாய் பெருக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன்
பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
துணை மேயர் இந்திரா பேசியது:
நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி சிறைக்குச் சென்ற
குடும்பத்திலிருந்து நான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னை மாநகரின்
இரண்டாவது குடிமகளாக தேர்ந்தெடுக்க காரணமான காங்கிரஸ் தலைவர்கள்
அனைவருக்கும் நன்றி.
குப்பை பிரச்னையை தீர்த்து, குப்பையில்லா நகரமாக பெங்களூருவை ஆக்குவதே எனது லட்சியம் என்றார் அவர்.