தினகரன் 26.10.2010
மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நகரின் கட்டமைப்பு, சேவைகளை திட்டமிட வேண்டியது அவசியம்
மும்பை, அக். 26: அதிகரித்து வரும் மக்கள் தொகை, இடநெருக்கடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாநகரின் கட்டமைப்பு மற்றும் சேவைகளை திட்டமிட வேண்டியது அவசியமாகியுள்ளது என மும்பை பொறுப்பு அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
காலி மனையின் மொத்த பரப்பளவில் கட்டிடம் கட்ட அனுமதிக்கப்படும் நிலப்பரப்பை(எப்எஸ்சி) நிர்ணயம் செய்வது குறித்து, மகாராஷ்டிரா மாநில அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. கொள்ளளவு மற்றும் காலி மனையின் பயன்பாடு ஆகியவற்றை பொறுத்து எப்எஸ்சி நிர்ணயம் செய்யப்படும். மாநில தலைமை செயலாளர் ஜே.பி. டாங்கே தலைமையிலான குழு, எப்எஸ்சி கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த குழு நடப்பு ஆண்டு இறுதியில் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மும்பை பொறுப்பு அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “மும்பை மாநகர் சந்தித்து வரும் தண்ணீர், கழிவுநீர் ஓடை, சாலை வசதி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் இடநெருக்கடி ஆகிய பிரச்னைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு எப்எஸ்சி கொள்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காலி மனைக்கு நிர்ணயம் செய்யப்படும் எப்எஸ்சி, அப்பகுதியின் கொள்ளளவு, கட்டமைப்பு ஆகியவற்றை ஈடு செய்ய வேண்டும். மும்பையில் தற்போது எப்எஸ்சி நிர்ணயம் ஒரே அளவுகோலை கொண்டதாக இருக்கிறது. ஆனால் உலகில் வளர்ந்த நாடுகளின் மாநகரங்களில் எப்எஸ்சி நிர்ணயம், கட்டமைப்பை பொறுத்து வேறுபடுகிறது. மும்பையின் கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றால், அனைத்து பிரச்னைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு எப்எஸ்சி கொள்கை வகுக்கப்பட வேண்டும்“. இவ்வாறு அவர் தெரிவித்தார்.