தினமலர் 18.03.2010
மதுரையில் மூன்றாயிரம் பேருக்கு உயிர்காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை : மாநகராட்சி முடிவு
மதுரை: மதுரை மாவட்டத்தில் 3000 பேருக்கு 8.40 கோடி ரூபாய் செலவில் உயிர்காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு உயர் சிகிச்சைக்கான உயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் பல பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
அவர்களில் சிலர் நேற்று கலெக்டர் (பொறுப்பு) தினேஷ்பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தனர். இருதயத்தில் ஓட்டை ஏற்பட்ட ஓட்டையால் அவதிப்பட்ட மதுரை பழங்காநத்தம் நல்லகண்ணு மகன் ஜெயராம் (5) இத்திட்டத்தில் பயன் பெற்றவர். நல்லகண்ணு கூறுகையில், ”பள்ளியில் தடுப்பூசி போடுவதற்காக எனது மகனை பரிசோதித்தனர். அப்போது எனது மகன் இருதயத்தில் பிரச்னை இருப்பதால் தடுப்பூசி போட முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே ஆஸ்பத்திரியில் எனது மகனுக்கு பரிசோதனை நடந்தது. அவருக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. இதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்தனர். அந்தளவு வசதி இல்லாத நிலையில், முதல்வரின் உயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தேன். இத்திட்டத்தில் அப்போலோ ஆஸ்பத்திரியில் எனது மகன் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன் சிகிச்சை பெற்றார்.
தற்போது நலமுடன் உள்ளார்” என்றார். இதேபோல இத்திட்டத்தில் பயனடைந்த செல்லூர் நெசவாளர்கள் ராஜூ, பிரபாகரன், ஹரிகரன் ஆகியோரும் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:மதுரை மாவட்டத்தில் 3000 பேர் உயிர்காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். இவர்களில் 1500 பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதியுள்ளார் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதற்காக 8.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 5.89 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது” என்றார். உயிர்காப்பீட்டு திட்ட அலுவலர் முகம்மது, ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், சாலிதளபதி பங்கேற்றனர்.