மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க 18-வது மாநில செயற்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். கோவில்பட்டி கிளை சங்கத் தலைவர் ஆபிரகாம்ஜெயராஜ், மாநில பொதுச்செயலர் சுபாஷ்சந்திரன், மாநில அமைப்பு செயலர் பாஸ்கரன், மாநில துணைத் தலைவர் நாகராஜன், மாநில இணைச் செயலர் ராஜமுக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கப் பொருளாளர் நாராயணன் கிளைச் சங்க ஆண்டறிக்கையை வாசித்தார். மாநில பொதுச்செயலர் சீத்தாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், தலைமை நிலையச் செயலர் சின்னண்ணன், மாநில துணை பொதுச்செயலர்கள் மாடசாமி, முத்து குமரகுருபரன் உள்பட சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். கிளைச் செயலர் ராமச்சந்திரன் வரவேற்றார். பெருமாள் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 6-வது சம்பள கமிஷன் அறிவித்து 7 ஆண்டுகள் கடந்துவிட்டதால், 7-வது கமிஷனை உடனே அமைக்குமாறும், அதுவரை 50 சதவிகித அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தியும், ஓய்வூதியர் இறந்துவிட்டால் குடும்ப ஓய்வூதியம் பெற மனைவியோ, குழந்தைகளோ யாரும் இல்லையெனில் அவரது விதவை மருமகளுக்கு வேறு வருமானம் ஏதும் இல்லையெனில் குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.
மருத்துவ உதவித் திட்ட உச்சவரம்பு தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர் 7 ஆண்டுக்குள் இறந்துவிட்டால், 7 ஆண்டுகள் முடியும் வரை முழு ஓய்வூதியம் வழங்கப்படுவதை 10 ஆண்டுகள் வரை என திருத்தி உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.