மாநகராட்சி பள்ளிக்கு அடிப்படை வசதிகள்
திருச்சி: திருச்சி மாநகராட்சி பள்ளிகளுக்கு அடிப்படை வசதி வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்க நகர்ப்புற வளமையம் சார்பில் திருச்சி மாநகராட்சி பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் உறையூர் பாண்டமங்கலம் தெற்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கோ அபிசேகபுரம் கோட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாலகுரு, உதவி ஆணையர் தயாநிதி, அனைவருக்கும் கல்வி இயக்க நகர்ப்புற வள மைய மேற்பார்வையாளர் முகமது யூசுப், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கோமதிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்று, தங்கள் பள்ளிகளுக்கு தேவையான கழிவறை, வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கைகளை செய்து தருவோம் என்று கோட்ட தலைவர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.