தினமலர் 22.03.2013
மாநகராட்சி புதிய கட்டிடத்தில் நவீன அறைகள் பொதுப்பிரிவு அலுவலகம் விரைவில் மாற்றம்
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி புதிய கட்டிடத்தில், பொதுப்பிரிவு அலுவலர்களுக்கான நவீன
இருக்கைகள், அறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஈரோடு நகராட்சி
கடந்த, 2008ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட,
சிறப்பு நிதியாக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள்
துவங்கப்பட்டது.
கூட்ட அரங்கு, மேயர், துணைமேயர், கமிஷனர் அறைகள்,
அலுவலர் ஆலோசனை அரங்கு, ஆண், பெண் கவுன்சிலர்களுக்கு குளிரூட்டப்பட்ட தனி
அறைகள், கீழ்த்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க மேலும், 1.48 கோடி
செலவிடப்பட்டது.
பணிகள் முடிந்து கடந்த ஜனவரி மாதம், தமிழக முதல்வர்
ஜெயலலிதா வீடியோகான்ஃபரன் மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.
ஆனால், பழைய கட்டிடத்தில், பொதுப்பிரிவு அலுவலகம் தொடர்பான செயல்பாடுகள்
இருப்பதால், அலுவல் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
மேயர், துணைமேயர்,
கமிஷனர், உயர்அதிகாரிகளின் அறைகள் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு, மற்ற
அலுவலர்களின் இடங்கள் பழைய கட்டிடத்தில் செயல்படுவதை மாற்றியமைக்க
மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, ஐந்து லட்சம் ரூபாய்
மதிப்பில் புதிய கட்டிடத்திலேயே, பொதுப்பிரிவு அலுவலர்களுக்கான இடங்கள்
ஒதுக்கப்பட்டு நவீன இருக்கைகள், அறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
நவீன முறையில் அமைக்கப்படும் அலுவலக செயல்பாடுகள் ஒரு மாதத்துக்குள்
முடிவடைந்து, நடைமுறைக்கு வரும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.