மாலை மலர் 22.10.2013

சென்னை, அக்.22- சென்னை மாநகரில் 16 சிசு சீரமைக்கும் பிரிவு அமைப்பதற்கு ரூ. 2 கோடியே 40 லட்சம் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக
நேற்று வடபழனி 24 மணி நேர அவசர மகப்பேறுகால கவனிப்பு மருத்துவமனையில்
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சிசு சீரமைப்பு பிரிவினை தொடங்கி
வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் 24 மணி நேர அவசர பேறுகால
மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றிற்கு 18,000 குழந்தைகள் பிறக்கின்றன. குறைந்த
எடை, குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் பிறப்பின் போது ஏற்படும்
மூச்சுத் திணறல் போன்ற உடல்நலம் குன்றிய சிசுக்களின் உடனடி பராமரிப்புக்கு,
சிசு பராமரிப்பு பிரிவு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். சிசு
சீரமைப்பு பிரிவு அமைப்பதன் மூலம் பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம் கணிசமாக
குறையும்.
வடபழனியில் 24 மணி நேர அவசர பேறுகால கவனிப்பு
மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான
உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. மைய பிராணவாயு
அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஆணையாளர் விக்ரம் கபூர், துணை
ஆணையர் டிஆனந்த், தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன்,
மண்டலக் குழு தலைவர் எல்.ஐ.சி.எம்.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.