தினமலர் 29.09.2010
வரி வசூல் மையத்துக்கு பூட்டு எதற்கு?மாநகராட்சி மீது மக்கள் அதிருப்தி
கோவை : மாநகராட்சி வரி வசூல் மையம் மூடப்பட்டதால், பீள மேடு பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.கோவை மாநகராட்சி வரி வசூல் மையம் பீளமேடு, பயனீர் மில் ரோட்டில் உள்ளது. இங்கு வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. சில மாதங்களாக இம்மையம் பூட் டப்பட்டுள்ளதால் வரி வசூல் பணி நடப்பதில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த வரி வசூல் மையம் பீளமேடு பகுதியை மையமாக வைத்தே செயல்பட்டு வந்தது. நான்கு கி.மீ., சுற்றளவிலுள்ள வீடு, தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் என்று 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை செலுத்தி வந்தனர். இந்நிலையில், அலுவலகம் மூடப்பட்டதால், மக்கள் வரி செலுத்த முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிலர் வரி செலுத்த தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வரி வசூல் மையத்தை திறக்க ஏற்பாடு செய்யாத மாநகராட்சி, வரிசெலுத்தாமல் நிலுவையில் உள்ள பீளமேடு மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வீடு, கடை, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரித்துள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பீளமேடு பகுதி மக்கள் கூறியதாவது:மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை, மாநகராட்சி பெயரில் வங்கிகளில் நேரடியாக செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் வங்கிகள், வரியினங்களை பெற மறுத்தும், தாமதம் செய்தும் வருகின்றன. டாக்டர் பாலசுந்தரம் ரோட்டிலுள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி செலுத்த சென்றால், பணி அனுபவமில்லாத நபர்களை அங்கு பணியமர்த்தியுள்ளனர். அவர்களால் துரிதமாக பணியாற்றி வரிவசூலித்து, ரசீது வழங்க முடிவதில்லை. யாராவது கேள்வி எழுப்பினால், “வங்கியில் செலுத்துங்கள்‘ எனக்கூறி, அனுப்பி விடுகின்றனர். வரி செலுத்த அறிவிப்பு செய்யும் மாநகராட்சி நிர்வாகம், அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. பயனீர் மில் ரோட்டில் மூடப்பட்டிருக்கும் வரி வசூல் மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.