தினமணி 28.06.2013
தினமணி 28.06.2013
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மும்முரம்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர்
ராஜீவ்காந்தியின் நினைவிடம் உள்ளது. மேலும், ஸ்ரீபெரும்புதூரைச்
சுற்றியுள்ள இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட
பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பன்னாட்டு
தொழிற்சாலைகள் உள்பட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதனால் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்,
வெளிநாட்டினர் பலரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு வந்து
செல்கின்றனர். எனவே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதிகளை தூய்மையாகவும்,
சுகாதாரமாகவும், பசுமையாகவும் மாற்றவும்,
ஸ்ரீபெரும்புதூர் பேருராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு
மேலாண்மைத் திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆகிய பணிகளை
செயல்படுத்தவும் நகர்புற உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்
ரூ.101.38 கோடி நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
இதில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு ரூ.56.22 கோடியும்,
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்
திட்டத்துக்கு ரூ.40.71 கோடியும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு
ரூ.4.44 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் திட்டம் ஆகியவை சென்னை
குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. திடக்கழிவு
மேலாண்மைத் திட்டத்தை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகமே செயல்படுத்த
உள்ளது.
இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை சென்னை குடிநீர் வடிகால்
வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர்
பேரூராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஒ. காலனியில் பாதாள சாக்கடை கழிவு நீரைத்
தேக்கி வைப்பதற்கான தொட்டிகள் அமைக்க பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக தற்போது
பள்ளங்கள் தோண்டும் பணி நடைபெற்றது வருகிறது. மேலும் பேருராட்சியில் உள்ள
தெருக்களில் குழாய்கள் பதிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.