குடிநீர் வரவில்லையா? 13ம் தேதி புகார் செய்யலாம்
சென்னை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை, வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான மனுக்களை 13ம் தேதி நேரில் கொடுத்து தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெறும் திறந்தவெளி கூட்டம், வரும் 13ம்தேதி காலை 10 மணி முதல் முதல் பிற்பகல் 1 மணி வரை, அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி அலுவலகங்களில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தபட்ட பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் குறித்த சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டு, 31 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சந்திரமோகன் கூறியுள்ளார்.