தினமலர் 12.03.2010
ரூ.1.50 கோடியில் நவீன எரிவாயு மயானம் நிறைவு
உடுமலை: உடுமலையில் 1.50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட நவீன எரிவாயு மயான பணி நிறைவடைந் துள்ளது.உடுமலையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து “மக்கள் பேரவை‘ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரவை மூலம் நவீன எரிவாயு மயானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, உடுமலை நகரம் மற்றும் கிராம பகுதி மக்களிடம் நிதி திரட்டி, 1.50 கோடி ரூபாய் செலவில் நவீன எரிவாயு மயானம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு “முக்தி‘ என பெயரிடப் பட்டுள்ளது.சுற்றுப்புறச்சூழல் மாசுபடாத வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த எரிவாயு மயானத்தில், இறுதி சடங்கு செய்யும் வகையில், பிரார்த்தனை மண்டபம், எரியூட்டு மையம், மொட்டையடித்து சடங்கு செய்வதற்கு தனி மண்டபம் உட்பட அனைத்து வசதிகளுடன், அழகாக வடிமைக்கப்பட்டுள்ளது.மரம் மற்றும் தேங்காய் சிரட்டை மூலம், “பயோகாஸ்‘ உற்பத்தி செய்து, உயர் வெப்பத்தில் சடலம் எரிக்கப்படும். வெளியேறும் புகையால் சுற்றுப்புறம் பாதிக்காமல் இருக்க, இயந்திரம் மற்றும் தண்ணீர் தொட்டிகள் வழியாக வாயு சுத்திகரிக்கப்பட்டு, 100 அடி உயரமுள்ள புகை போக்கி வழியாக வெண் புகை வெளியேற்றப்படும். இதன் திறப்பு விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது.திறப்பு விழாவிற்கு மக்கள் பேரவை தலைவர் கெங்குசாமி தலைமை வகிக்கிறார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் சமயமூர்த்தி, எஸ். எஸ்.ஏ., ஆலோசகர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மக்கள் பேரவை நிர்வாகிகள் கூறியதாவது:நவீன எரிவாயு மயானத்துக்கு, இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி, லயன்ஸ் கிளப் சார்பில் ஒன்பது லட்சம் செலவில் அமரர் ஊர்தி வழங்கப்படுகிறது. எம். எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் ஏழு லட்சம் ரூபாய் செலவில், தனியாக ஒரு மண்டபம், தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சடலம் எரிய ஒரு மணி நேரமாகும். தினமும் எட்டு சடலம் வரை எரிக்கலாம்.பதிவு செய்தால், நவீன எரிவாயு மயானத்தில் இருந்து வாகனம் மூலம் சடலம் எடுத்து வரப்படும். போக்குவரத்து மற்றும் எரியூட்டும் செலவாக, ஒரு சடலத்துக்கு 20 கி.மீ., வரை 1,200 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 20 கி.மீ.,க்கு மேல் இருந்தால், கி.மீ.,க்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும். சடலம் எரியூட்டப்பட்டு, அஸ்தி எடுத்து வழங்கப்படும். குறைந்த செலவில், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாது. மேலும், மற்றொரு எரியூட்டும் அமைப்பு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும், என்றனர்.