தினமலர் 02.01.2014
கட்டட வரைவாளர்களுக்கு ’16 கட்டளைகள்’ இணையதளத்தில் விண்ணப்பிக்க இது அவசியம்
மதுரை:மதுரை மாநகராட்சியில், வெப்சைட் மூலம் வரைபட அனுமதி வழங்குவது தொடர்பாக, கட்டட வரைவாளர்களுக்கு, ’16 கட்டளைகளை’ நகரமைப்பு பிரிவு விதித்துள்ளது.
நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வரைபட வரைவாளர்களுக்கு வழங்கிய 16 கட்டளைகள்:
- மனை உரிமையாளர், கட்டடவிண்ணப்பங்களை, வெப்சைட் மூலம் பெற்ற ஆய்வறிக்கையை பெற்ற 15 நாட்களுக்குள், சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பத்துடன், வெப்சைட்டில் பெறப்பட்ட ஆய்வறிக்கை மற்றும் மாநகராட்சிக்கு செலுத்திய கட்டண ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு, முறைப்படுத்திய மனைப்பிரிவின் அனுமதி எண் குறிப்பிடப்பட வேண்டும்.
- கட்டிட வரைபட நகல் 5 இருக்க வேண்டும்.
- அரசிதழில் பதிவுபெற்ற அலுவலர் அல்லது நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் கட்டாயம்.
- ரூ.20 ஸ்டாம்ப் பேப்பரில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் பெற்று, சமர்ப்பிக்க வேண்டும்.
- மனையின் 4 திசையிலும் நின்று, அதன் உரிமையாளர் எடுத்த போட்டோ வேண்டும்.
- மனை உரிமையாளரின் 2 ‘பாஸ்போர்ட் சைஸ்’ போட்டோ அவசியம்
- திட்டப் பகுதியில் அமையும் கட்டடங்களுக்கு, விதிகளின்படி, அதன் பரப்பளவு முன் திறவிடம், பக்க திறவிடம், பின்புற திறவிடத்தை வரைபடத்தில், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
- முதல் தளத்திற்கு மட்டும் வரைபட அனுமதி கேட்போர், கட்டடத்தின் தரைதள வரைபட நகல் மற்றும் கட்டிய ஆண்டின் விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- வரைபடத்தில், கட்டடம் அல்லது மனை உரிமையாளரின் பெயர், மற்றும் வெப்சைட்டில் பெற்ற எண்ணை குறிப்பிடவேண்டும்.
- கட்டட வரைபடத்தில் ரோட்டின் அகலம், ரோட்டில் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
- கட்டட வரைபடத்தின் உட்பிரிவு செய்யப்பட்டசர்வே வரைபடத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- மீனாட்சி அம்மன் கோயிலிருந்து 1கி.மீ., சுற்றளவிற்கு, 9மீட்டர் உயரம் வரை, தரை மற்றும் முதல் தளத்திற்கு மட்டுமே வரைபடம் தயாரிக்க வேண்டும். தரைகீழ் தளத்திற்கு கண்டிப்பாக வரைபடம் சமர்ப்பிக்கக் கூடாது.
- அனைத்து கட்டட வரைபடங்களிலும், குறைந்தபட்சம் முன்புற திறவிடம் மற்றும் பக்கதிறவிடத்தில் 5 அடி துாரம் இருக்க வேண்டும்.
- வணிக கட்டடங்களுக்கு 2,000 சதுரஅடி, குடியிருப்பு கட்டடங்களுக்கு 4,000 சதுர அடிக்கு மட்டுமே, மாநகராட்சியின் திட்டஅனுமதி மற்றும் கட்டட அனுமதி கேட்கும் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால், உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற்ற பிறகே, மாநகராட்சியின் கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கவேண்டும், என தெரிவித்துள்ளனர்.