தினத்தந்தி 03.10.2013
ரு.1½ கோடி மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படும் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி உத்தரவு

திருச்சியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தண்டபாணி உத்தரவிட்டார்.
ரூ.1½ கோடியில் வடிகால்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் அண்ணாநகர் பகுதியில்
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு சிலரால் ஆக்கிரமிப்பு செய்து
கட்டப்பட்டுள்ள வீடுகள் உள்ள இடத்தில் மழைநீர் சரிவர செல்லாமல் தேங்கி
உள்ளது.
இதனை மாநகராட்சி ஆணையர் தண்டபாணி நேரில் ஆய்வு செய்து அந்த இடத்தில்
உள்ள மக்களுக்கு போதுமான பாதுகாப்பான மாற்று இடம் வழங்கவும், மேலும்
நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் வடிகால்
வாய்க்கால்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இறைச்சி கடை ஆய்வு
மேலும், அரியமங்கலம் கோட்டத்தில் காந்தி சந்தை அருகில் ரூ.1 கோடி
மதிப்பில் நவீன ஆட்டு இறைச்சி கூடம் கட்டப்பட்டு உள்ள இடத்தை ஆணையர்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது செயற்பொறியாளர் அருணாசலம்,
உதவிஆணையர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், குமரேசன் மற்றும்
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.