தினத்தந்தி 23.08.2013
ரூ. 2 கோடி செலவில் கோவை டைடல் பார்க்கிற்கு தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர்
கோவை பீளமேட்டில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு(டைடல்
பார்க்) தினமும் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான குழாய்
இணைப்பு பணியை மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்.
டைடல் பார்க்கிற்கு குடிநீர்
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து தற்போது தினமும் ஒரு
கோடியே 20 லட்சம் லிட்டர் குடிநீரும், பில்லூர் முதல் திட்டத்திலிருந்து
தினமும் 6 கோடியே 20 லட்சம் லிட்டரும், இரண்டாவது திட்டத்திலிருந்து 3 கோடி
லிட்டரும் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை பீளமேட்டில் டைடல் பார்க் உள்ளது இங்கு 50-க்கும் மேற்பட்ட
சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான குடிநீரை டைடல் பார்க்
நிறுவனம் இதுவரை வெளியிலிருந்து தான் வாங்கி வந்தது. தற்போது கோவை
மாநகராட்சி சார்பில் டைடல் பார்க்கிற்கு தினமும் ஒரு கோடியே 20 லட்சம்
லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.இதற்காக கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரம்
பிரதான குடிநீர் தொட்டியிலிருந்து (எம்.எஸ்.ஆர்.)பீளமேட்டில் உள்ள டைடல்
பார்க்கிற்கு குடிநீர் சப்ளை செய்வதற்கான குழாய்கள் பதிக்கும் பணி நேற்று
தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி
கலந்து கொண்டு குழாய் பதிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
ரூ. 2 கோடி செலவில்…
இந்தநிகழ்ச்சியில் சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் லதா,
துணை ஆணையாளர் சிவராசு, கிழக்கு மண்டல தலைவர்
கே.ஆர்.ஜெயராமன்,குழுத்தலைவர்கள் அம்மன்அர்ச்சுனன், பிரபாகரன், கவுன்சிலர்
சால்ட்வெள்ளிங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை ராமகிருஷ்ணாபுரத்திலிருந்து பீளமேடு டைடல் பார்க்கிற்கு குழாய்கள்
பதிப்பு மற்றும் கட்டுமான பணிகள் ரூ. 1 கோடியே 92 லட்சம் செலவில் நடைபெற
உள்ளது.சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு 200 மி.மீட்டர் விட்டத்தில் இந்த
குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இந்த பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது
என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள்.