தினகரன் 21.12.2010
வணிக நிறுவனங்களிடம் ரூ. 200 கோடி திரட்ட மாநகராட்சி திட்டம்
பெங்களூர், டிச.21:

வணிக நிறுவனங்களிடம் லைசென்ஸ் கட்டணமாக ரூ.200 கோடி திரட்ட பெங்களூர் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பெருநகர் பெங்களூர் எல்லைக்குள் 5 லட்சத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. ஆனால் அவற்றில் 40 ஆயிரம் வணிக நிறுவனங்கள் மட்டுமே லைசென்ஸ் பெற்றுள்ளன. லைசென்ஸ் கட்டணமாக மாநகராட்சிக்கு ரூ.17 கோடி கிடைத்துவருகிறது. இத்தொகையை ரூ.200 கோடியாக உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா, இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. முடிதிருத்தும் கடை முதல் சாப்ட்வேர் நிறுவனம் வரை பெங்களூர் எல்லையிலுள்ள வணிக நிறுவனங்கள் கட்டாயமாக லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை சித்தய்யா வலியுறுத்தியுள்ளார்.
மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் விளம்பர பிரிவுக்கான துணை கமிஷனர் ராமச்சந்திரமூர்த்தி இதுகுறித்து கூறியது: சிறிய வணிக நிறுவனங்களிடமிருந்து சிறிய தொகைதான் வசூல் செய்யப்பட்டாலும் கூட அனைவரும் லைசென்ஸ் கட்டணம் செலுத்தினால் அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
‘லைசென்ஸ் பெறுவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. பணம் செலுத்திய பிறகும் லைசென்ஸ் கிடைக்கவி¢ல்லை‘ என்று வர்த்தகர்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே பெங்களூர் மாநகராட்சி தலைமையகத்திலேயே லைசென்ஸ் வழங்க ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி அதன் மூலம் லைசென்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு உடனடியாக லைசென்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மண்டல வாரியாக துண்டு பிரசுரங்கள் மூலம் வணிகர்களுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.