தினகரன் 30.12.2010
200 வார்டுகளுடன் பெருநகரமாக மாறுகிறது சென்னை மாநகராட்சி
சென்னை, டிச.30:

புறநகர் பகுதியில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகளை சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பான தீர்மானம் இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்படுகிறது.
சென்னை மாநகராட்சி 10 மண்டலமாக பிரிக்கப்பட்டு, 155 வார்டுகளாக செயல்படுகிறது. இதை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதியில் உள்ள 9 நகராட்சிகளும், 25 பஞ்சாயத்துகளும் இணைக்கப்பட உள்ளன. இதனால் சென்னை 430 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட பெருநகரமாக மாறுகிறது.
இதில், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம், திருவொற்றியூர், மணலி, கத்திவாக்கம் ஆகிய 9 நகராட்சிகளும். இடையஞ்சாவடி, கடையான்குப்பம், கடப்பாக்கம், தீயப்பாக்கம் உள்ளிட்ட 25 பஞ்சாயத்துகள் அடங்கும்.
இதனால் சென்னை மாநகராட்சியில் தற்போதுள்ள 155 வார்டுகள் இனி 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவே, 155 வார்டுகள் 107 வார்டுகளாகவும், மீதமுள்ள 93வார்டுகள் மக்கள் தொகை அடிப்படையில் வார்டுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் இருக்கும் வகையில் பிரிக்கப்படுகிறது. வார்டுகள் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டது. புறநகர் பகுதியில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகள் முறைப்படி இணைக்கப்பட்டதும் சென்னை மாநகராட்சி வார்டுகளாக அறிவிக்கப்படும். விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மற்றும் புதிய வார்டுகள் குறித்த அனுமதி பெறுவதற்கான தீர்மானம் இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்படுகிறது.