மாலை மலர் 13.02.2014

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:–
நகர்ப்புறங்களில்
சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம்
உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் பொது மக்கள் ஒரே இடத்தில்
செலுத்திட வசதியாக, சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் நகர்ப்புற பொதுச்
சேவை மையங்களை முதல்– அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த பொதுச்சேவை மையங்கள் பொது மக்களுக்கான மின்னணுச் சேவைகளையும், பிற சேவைகளையும் வழங்கும்.
சென்னை
மாநகரத்தில் மேலும் இதுபோன்ற 200 பொதுச்சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன்
மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள்
படிப்படியாக விரிவுபடுத்தப்படும். தகவல் தொழில் நுட்பத்துறையின்
கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்கள் மூலம் இந்தப் பொதுச்
சேவை மையங்கள் நிருவகிக்கப்படும். இதுபோன்ற அமைப்பு ரீதியிலான
நடவடிக்கைகள், மூலமாக, நிர்வாகத்திலும் பொதுச் சேவைகள் அளிப்பதிலும்
குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.
மனுநீதி
முகாம்கள் உட்பட மக்கள் குறை தீர்க்கும் வழிமுறைகள் மீது தொடர்ந்து இந்த
அரசு கவனம் செலுத்தும். இந்த வகையில், அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு
மக்களுக்கு அதிக சேவைகள் வழங்குவதன் மூலம் அம்மா திட்டம் பாராட்டத்தக்க ஒரு
முயற்சியாகக் கருதப்படுகிறது.
வருவாய்த்துறையின் பணிகளை
பொதுமக்களுடைய இல்லங்களுக்கே கொண்டு சேர்ப்பதுடன், அவர்களுடைய குறைகளை
விரைவாகத் தீர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இத்திட்டம்
ஏற்படுத்தியுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் வழி முறைகளைத் திறம்படச்
செயல்படுத்துவதன் மூலம் பொதுச்சேவைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுவதை இந்த
அரசு உறுதி செய்யும்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த அரசு 104.79
கோடி ரூபாயை தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது. 2013–2014–ம்
ஆண்டில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், விருதுகள், பரிசுகள்,
ஆகியவற்றை அளித்திடவும் 46.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த மூன்று
ஆண்டுகளில் மட்டும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 31.61 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டிற்கு, இப்பல்கலைக் கழகத்திற்கு 6.55
கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 2014–2015–ம் ஆண்டுக்கு 39.29 கோடி
ரூபாய் தமிழ் வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.