தினமலர் 24.03.2010
மாநகராட்சி பள்ளியில் 21 வகை இலவச காலை உணவு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். காலையில் என்ன வகையான உணவு வழங்கலாம் என்பது குறித்து பரிசீலனை நடக்கிறது. மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாலும், அதிகாலை நேரத்தில் பெற்றோர்கள் வேலைக்கு செல்வதாலும், குழந்தைகளுக்கு சமைத்துக்கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பசியோடு பள்ளிக்கு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனால் படிப்பில் கவனமின்றி மாணவர்கள் சோர்வாக காணப்படுவதும் தெரியவந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டம் வழங்குவது அறிவிக்கப்பட்டது. ‘கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் மாநகராட்சிக்குட்பட்ட 85 பள்ளிகளில் படிக்கும் 34 ஆயிரம் மாணவ மாணவியரின் நலன் கருதி, காலை சிற்றுண்டி பள்ளியிலேயே இலவசமாக வழங்கப்படும்‘ என்று மாநகராட்சி அறிவித்தது. இத்திட்டத்திற்காக அவிநாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைகழக ஊட்டச்சத்து உணவியல் துறை மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்பித்தது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களுக்கு என்னென்ன உணவு வழங்க வேண்டும் என்று ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளனர். அதன்படி இட்லி, இடியாப்பம், ராகிபுட்டு, ராகிரொட்டி,பருப்புபிடி, கொளுக்கட்டை, சேமியா, உப்புமா, அவல், வென்பொங்கல் உள்ளிட்ட 21 வகையான உணவு வகைகளை வழங்கலாம். இவற்றோடு ஏதாவது ஒரு பழம் மற்றும் பால் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் செலவு செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதனால் இத்திட்டத்திற்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன், வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். இது குறித்து மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது:
‘கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தவும், பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு சிறு தொகையை மட்டும் பயன்படுத்திவிட்டு மீதமுள்ள தொகையை எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தவில்லை. கல்விக்குழு யோசனைகளை தீர்மானங்களாக்கி, நிறைவேற்றி செயல் படுத்த அதிகாரிகளுக்கு வழிகாட்டுகிறது. ஆனால் அதிகாரிகள் திட்டங்களை செயல்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பயனற்று போய் விடுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டம் தமிழகத்தில் எங்குமே அறிவிக்கப்படவில்லை. இதை செயல்படுத்த வேண்டிய பொருப்பு அதிகாரிகளின் கையில் தான் உள்ளது‘ என்றார.