தினகரன் 20.06.2013
புதுப்பொலிவு பெறும் 210 பஸ் நிறுத்தங்கள்
திருச்சி, : திருச்சி மாநகரில் உள்ள 210 பஸ் நிறுத்தங்களிலும் சீரமைப்பு பணி மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
திருச்சி
மாநகரில் 9.2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர வியாபாரம், கல்வி,
மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள்
வெளியூரிலிருந்து வந்து செல்கின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக சுமார்
500க்கும் மேற்பட்ட அரசு, தனியார் டவுன் பஸ்கள் மாநகர பகுதிகளில்
இயக்கப்படுகின்றன. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில்,
மழையிலிருந்து தங்களை காத்துக் கொள்ள மாநகரில் 210 இடங்களில் பஸ் நிறுத்தம்
அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை இருக்கைகள் உடைந்து, மின்
விளக்கின்றி, குப்பை மேடாக உள்ளன. மேலும், மேற்கூரை மற்றும் பக்கவாட்டு
தடுப்பு கிழிந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கின்றன. எனவே பயன்படுத்த
நிலையிலுள்ள பஸ் ஸ்டாப்களை பராமரிக்கவும், புதிதாக பல இடங்களில் பஸ் ஸ்டாப்
அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பலனாக மாநகரிலுள்ள 210 பஸ் நிறுத்தங்களையும் சீரமைக்க மாநகராட்சி
நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.
பஸ் நிறுத்தங்களில் இருக்கை மற்றும்
மேற்கூரை அமைத்தல், மின் விளக்கு பொருத்துதல், டைல்ஸ் பதித்த தரைத்தளம்
ஏற்படுத்துதல் போன்ற சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் ஒப்பந்த
புள்ளிகள் கோரப்பட உள்ளன. இதற்கான அனு மதி கேட்டு வரும் 24ம் தேதி நடை
பெறவுள்ள மாமன்ற கவுன்சில் கூட்டத்தில் தீர்மா னம் வைக் கப்பட உள்ளது.