தினமலர் 05.08.2010
ஒகேனக்கல்லில் ரூ.2.3 கோடியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் தகவல்
பென்னாகரம்: “”ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் வளர்ச்சி பணிக்கு 2 கோடியே 3 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,”என கலெக்டர் தெரிவித்தார். ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறை கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஆடிப்பெருக்கு விழாவுக்கு கலெக்டர் அமுதா தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அலுவலர் தண்டபாணி வரவேற்றார். எம்.எல்.ஏ., இன்பசேகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் ஸ்டான்லி முருகேசன், யூனியன் சேர்மன் திரவுபதி, மாவட்ட கவுன்சிலர்கள் ஆறுமுகம், அமுதா, தமிழ்செல்வி, பஞ்சாயத்து தலைவர் கவிதா சம்பத், கவுன்சிலர் முருகன், தாசில்தார் ஜீனத்பீவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி, தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை, வனத்துறை மகளிர் மேம்பாட்டுக்குழு, கதர் துறை சார்பில் கண்காட்டி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. நிறைவு நாளையொட்டிகரகாட்டம், தெம்மாங்கு பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, பரதநாட்டியம் ஆகியவை நடந்தது.
கலெக்டர் அமுதா பேசியதாவது: ஒகேனக்கல் சுற்றுலாதளத்தை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு திட்டப்பணிகள் நடக்கவுள்ளது. இசைக்கேற்ப நடனமாடும் நீர் ஊற்று அமைக்கும் பணி, காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் பயமின்றி குளிக்க படிக்கட்டுகள், சுற்றுலா பயணிகளின் உடமைகளை பாதுகாக்க பாதுகாப்பு பெட்டக வசதி ஆகிய பணிக்கு 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலை பண்ணையை மேம்படுத்த 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மசாஜ் தொழிலாளர்களுக்கு ஆயுர்வேத பயிற்சி அளிக்க கேரளாவில் இருந்து மசாஜ் நிபுணர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். பரிசல் ஓட்டிகள் 2 மணி நேரத்திற்கு கூடுதலாக பரிசல் ஓட்டினால் பயணிகளிடம் 100 ரூபாய் வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் 85 நபர்களுக்கு பரிசல் ஒட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.