தினமலர் 22.09.2010
பெரம்பலூர் நகராட்சியில் தார்சாலை அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் தார்சாலை அமைக்க தமிழக அரசு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை நகராட்சி தலைவர் ராஜாவிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 23 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பைப் லைன் அமைக்கப்பட்ட பகுதிகளில் தார்சாலை அமைக்க மத்திய அரசின் நகர்புற மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதி திட்டத்தின்கீழ் 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இப்பகுதிகளில் தார்சாலை அமைக்க தமிழக அரசு சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் நடந்த விழாவில் அதற்கான ஆணையை நகராட்சி தலைவர் ராஜாவிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது நகராட்சி நிர்வாக தலைமை செயலர் அசோக்வரதன்செட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார், பெரம்பலூர் நகராட்சி இன்ஜினியர் கருணாகரன், ஓவர்சீயர்கள் பாண்டு, குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.