மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.34 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள்
திருப்பூர், : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் ரூ.34 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்தார்.பள்ளிக் கல்வித்துறை மூலமாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் திருப்பூர் சுண்டமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பில் 3 கூடுதல் வகுப்பறை, தலைமையாசிரியர் அறை கட்டடங்கள், செல்வம் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம் என மொ த்தம் ரூ.34 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா நேற்று நடந்து. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம் முன்னிலை வகித்தார். கூடுதல் வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன் பேசினார். இவ்விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, மாநகராட்சி நகரமைப்பு நிலைக்குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி, கல்விக் குழுத்தலைவர் பட்டுலிங்கம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அழகர்சாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.