புதுக்கோட்டையில் தூய்மைப் பகுதி:ரூ. 3.75 கோடியில் திட்ட மதிப்பீடு
புதுக்கோட்டை நகரில் தூய்மைப்பகுதி அமைக்க ரூ. 3.75 கோடியில் திட்ட மதிப்பீடு கருத்துருவை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ள மாவட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கு நகர் நல இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து நகர் நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர். சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை நகரம் மிகவும் அழகாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட நகரம். இன்று எல்லாத் தெருக்களும் குப்பை மேடாகக் காட்சி தருகின்றன. தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பல நகரங்களில் தூய்மைப் பகுதி என சில பகுதிகளை அறிவித்து அதனை சுத்தமாகப் பராமரிக்கின்றனர். திருச்சியில் அய்யப்பன் கோவில் உள்ள பகுதியை தூய்மைப் பகுதியாக அறிவித்துப் பாதுகாக்கப்படுகிறது.
புதுக்கோட்டையிலும் எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து டி.வி.எஸ். கார்னர் வரை உள்ள சாலையை தூய்மைப் பகுதியாக அறிவித்து பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும். ஏனென்றால் இந்த சாலையில் தான் நீதிமன்றம், ஆட்சித் தலைவர் முகாம் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகம், அரசு மன்னர் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, முக்கிய பிரமுகர்கள் தங்கும் ரோஜா இல்லம், மாவட்ட நீதிபதி இல்லம் ஆகியவை அமைந்துள்ளன். எனவே இந்தச் சாலையை தூய்மை பகுதியாக்க வேண்டும் என மாவட்ட திட்டக்குழுத் தலைவரும் மாவட்ட ஊராட்சித் தலைவருமான வி.சி. ராமையாவிடம் கோரிக்கை வைத்தோம். இந்தக் கோரிக்கையை ஏற்று அந்தச் சாலையின் இருபக்கமும் கட்டை கட்டி நடைமேடை அமைத்து அழகுச் செடிகளும், நிழல்தரும் மரங்களும் அமைத்து பராமரிக்க திட்ட மதிப்பீடு செய்து, திட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ரூ.3.75 கோடி மதிப்பிலான திட்டத்தை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளார். விரைவில் அந்த திட்டம் அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு நகர் நல இயக்கம் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவிக்கிறது.