தி இந்து
பொது மக்களுக்கு விநியோகிக்காமல் உணவகங்களுக்கு குடிநீர் விற்ற 4 லாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக் குடிநீர்
வாரியம் வணிக நிறுவனங்களுக்காக விநியோகம் செய்யும் குடிநீர் சேவையை சில
மாதங்களுக்கு முன்னர் ரத்து செய்தது. சென்னைக் குடிநீர் வாரிய ஒப்பந்த
அடிப்படையிலான லாரிகள் பொது மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரை முறைகேடாக
பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் வாரியம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடிநீர் வாரியத்தால் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் எவ்வித
முறைகேடும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவினரை
நியமித்து அவர்கள் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பள்ளிப்பட்டு நீர் நிரப்பு மையம் அருகில் உள்ள
கானகத்தில் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது
குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்கான
குடிநீரை முறைகேடாக தனியார் உணவகத்துக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதுபோல அண்ணாநகர் பகுதியில் சோதனை செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்ட 2
லாரிகள் பிடிபட்டன. இதையடுத்து இந்த 4 லாரிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம்
அபராதம் விதித்ததுடன், அவற்றின் ஒப்பந்த பணி ஆணைகளும் ரத்து செய்யப்பட்டன.
இனிவரும் காலங்களில் குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் முறைகேடுகளில்
ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில்
குடிநீர் வாரிய நிர்வாகம் எச்சரித்துள்ளது.