தினமலர் 20.12.2011
நெல்லையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல்: நெல்லை மாநகராட்சி அதிரடி
திருநெல்வேலி : நெல்லை வண்ணார்பேட்டையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி கட்டடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னையை தொடர்ந்து நெல்லையிலும் அனுமதி பெறாத கட்டடங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடந்துவருகின்றன. நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் அஜய் யாதவ் உத்தரவின் பேரில் நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் மேற்பார்வையில் தச்சநல்லூர் உதவிக் கமிஷனர் சாமுவேல் செல்வராஜ், இளநிலைப் பொறியாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி கட்டடத்திற்கு சென்று சீல் வைத்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “நெல்லையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. 2 மாடிக்கு அனுமதி வாங்கிவிட்டு 4 மாடிகள் கட்டியுள்ளனர். இதனால் கட்டடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டங்களுக்கு சீல் வைப்பு பணி தொடரும் என்றனர்’.