மாநகராட்சி சார்பில் 4 இலவச பல் மருத்துவமனைகள் திறப்பு
சென்னை மாநகராட்சியின் சார்பில் 4 இலவச பல் மருத்துவமனைகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
சென்னையில் மாநகராட்சி சார்பில் 11 இடங்களில் இலவச பல் மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஆழ்வார்பேட்டையில் முதல் பல் மருத்துவமனை ஏப்ரல் 19-ஆம் தேதி திறக்கப்பட்டது. திங்கள்கிழமை ஒரே நாளில் 4 இடங்களில் பல் மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
கந்தன் சாவடியில் உள்ள மருத்துவமனையையை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா திறந்து வைத்தார். மேயர் சைதை துரைசாமி, கே.பி.கந்தன் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் ராஜாராம், மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் கல்யாணி, உதவி ஆணையர் இளஞ்செழியன், கவுன்சிலர்கள் அமுதா வெங்கடேஷ், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். நங்கநல்லூர், அண்ணாநகர், பெசன்ட் நகர் எல்லையம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் பல் மருத்துவமனைகளை மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார். மேலும், நெற்குன்றம், வியாசர்பாடி, இளங்கோநகர், செம்பியம், அம்பத்தூர் வரதராஜபுரம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமையும், கத்திவாக்கம் பஜார் தெரு, மாதவரம் கண்ணபிரான் கோவில் தெரு ஆகிய இடங்களில் 25-ஆம் தேதியும் பல் மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் ஏற்கெனவே 4 பல் மருத்துவர்கள் உள்ளனர். இப்போது கூடுதலாக 26 புதிய பல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பல் மருத்துவமனை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்.