தினபூமி 24.12.2013
ரூ.441 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை, டிச.24 – சென்னை துரைப்பாக்கம் உள்பட தமிழ்நாடு முழுவதும்
ரூ.441 கோடியில் 10,867 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா தலைமை
செயகத்தில் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
முதல்வர் ஜெயலலிதா நேற்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு
குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, எழில் நகர் ஒக்கியம்
துரைப்பாக்கத்தில் 228 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள 6000 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், ஒக்கியம்
துரைப்பாக்கத்தில் 106 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள 2048 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் காணொலிக்
காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும் 106 கோடியே 79 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் தமிழகத்தின் பல்வேறு நகர்புறப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள
2819 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் நகர்புறக் குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின்
வாழ்க்கை நிலையினை மேம்படுத்த பல்வேறு வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு
மற்றும் மறுகுடியமர்வுத் திட்டப்பணிகளை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று
வாரியம் செயல்படுத்தி வருகின்றது. இந்த வாரியத்தின் பணிகள் முதலில்
சென்னையிலும் பின்னர் 1984_ஆம் ஆண்டு முதல் படிப்படியாக தமிழகத்திலுள்ள இதர
நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை, எழில் நகர் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 228 கோடியே 60 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6000 அடுக்குமாடி குடியிருப்புகள்;
ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 106 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள 2048 அடுக்குமாடி குடியிருப்புகள்; நொச்சி நகரில் 45 கோடியே
39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 628 அடுக்குமாடி
குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம், அம்மன்குளத்தில் 23 கோடியே 44
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 792 அடுக்குமாடி
குடியிருப்புகள்; புதுக்கோட்டை நகராட்சியில் மச்சுவாடியில் 2 கோடியே 60
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 96 அடுக்குமாடி
குடியிருப்புகள் மற்றும் சந்தைப்பேட்டையில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 84 அடுக்குமாடி குடியிருப்புகள்;
திருநெல்வேலி மாநகராட்சியில், வ.உ.சி. நகரில் 5 கோடியே 54 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 207 அடுக்குமாடி குடியிருப்புகள்;
தூத்துக்குடி மாநகராட்சியில், துரைசிங் நகரில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 78 குடியிருப்புகள்; நாமக்கல் நகராட்சியில்,
எம்.ஜி.ஆர். நகரில் 9 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள 342 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஓசர் நகராட்சியில்
எழில் நகர் பகுதி_2ல் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள்; சேலம் மாவட்டம்,
எருமாபாளையத்தில் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
400 அடுக்குமாடி குடியிருப்புகள்;
என மொத்தம் 441 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
10,867 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று
தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் 270 முதல் 357
சதுர அடி கொண்ட பரப்பளவில் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் முதல் 7 லட்சத்து
23 ஆயிரம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இக்குடியிருப்பு ஒவ்வொன்றிலும், ஒரு படுக்கை அறை, சமையலறையுடன் கூடிய ஒரு
பல்நோக்கு அறை, குளியலறை, கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக
அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப சில திட்டப் பகுதிகளில் சமூக
கட்டமைப்பு வசதிகளான நூலகம், சிறு கடைகள், நியாயவிலைக் கடைகள், ஆழ்துளை
குழாய் கிணறு மற்றும் பூங்கா ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குடியிருப்புகள் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும்,
நீர் வழி கால்வாய் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கும் மற்றும் மீனவ
குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் தங்க
கலியபெருமாள், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் தலைவர் கு.
தங்கமுத்து, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை
இயக்குநர் வி. சந்திரசேகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.