தினகரன் 05.02.2010
கெட்டுபோன உணவுகள் பறிமுதல் 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வேலூரில் மாநகராட்சி அதிகாரி அதிரடி
வேலூர் : வேலூரில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஓட்டல்களில் சேமித்து வைத்திருந்த கெட்டுபோன உணவுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இது தொடர்பாக 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஓட்டல்களில் மீதியாகும் உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து விட்டு மீண்டும் அவற்றை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டது.
அதன்படி வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரியம்வதா தலைமையில் உணவு ஆய்வாளர் கவுரிசுந்தர், துப்புரவு ஆய்வாளர் முருகன் ஆகியோர் நேற்று பல்வேறு ஓட்டல்களுக்கு அதிரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது லேபிள் இல்லாத உணவு வகைகள் மற்றும் மீதியாகும் உணவுபொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து அவற்றை மறுநாள் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சில உணவுபொருட்கள் மீது பூஞ்சை படர்ந்திருந்தது.கெட்டுபோன சட்னி வகைகள், ரொட்டிக்கு பயன்படுத்தும் சைடிஷ், ஊறுகாய் என அனைத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து நகரமைப்பு அலுவலர் பிரியம்வதா கூறியதாவது: கெட்டுப்போன உணவுகளை பாதுகாத்து வைத்திருந்த 5 ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமையல் செய்பவர்கள், பரிமாறுபவர்கள் கண்டிப்பாக கையுறை அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையல் செய்த உணவு வகைகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், இனிப்பகங்களில் திருப்பத்தூர் வட்டார உணவு ஆய்வாளர் நந்தகோபால், சுகாதார ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் சோதனை நடத்தினர்.