மாலை மலர் 05.08.2010
6
ஆண்டுகளில் கூவம் ஆறு முழுமையாக சீரமைக்கப்படும் நதிக்கரை ஓர பூங்காவை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் பேட்டிசென்னை, ஆக.5- கூவம் நதி சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் மற்றும் சிவானந்தா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு புதிய பூங்காக்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இரண்டு பூங்காக்களையும் திறந்து வைத்து, பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் சுமார் 730 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் உள்ள கூவம் கரைப்பகுதி கடந்த 8.12.2009 இன்று பொதுப்பணித்துறையால் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ரூபாய் ஒரு கோடியே 35 லட்சம் செலவில் அழகிய பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சுவாமி சிவானந்தா சாலையில் அண்ணாலை முதல் காமராஜர் சாலை வரையில் சுமார் 1,200 மீட்டர் நீளத்திற்கும், 5 மீட்டர் அகலத்திற்கும் கூவம் கரைப்பகுதியும் 1.02.2010 அன்று மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு, ரூபாய் 86 லட்சம் செலவில் ஏழிலார்ந்த பூங்கா அமைக்கும் பணிகளும் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு பூங்காக்களும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. லாங்ஸ் கார்டன் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 1,028 குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டு ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன், அவர்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணாசாலை அருகில் டாம்ஸ் ரோடு பகுதியில் உள்ள கூவம் கரை பகுதிகள் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளன. கூவம் ஆற்றை சீரமைக்கும் பணிகளின் ஒரு முக்கிய அங்கமாக சிந்தாதரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள கூவம் கரையை ஆக்கிரமித்து ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரி பாகங்களின் சிறுதொழிற்சாலைகள் உள்ளது.
அந்த சிறு தொழிற்சாலை உரிமையாளர்களிடம் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்த அங்கு இருக்கும் 1,200 சிறுத்தொழிற்சாலைகளுக்கு மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களது விருப்பம் போல் காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகில் உள்ள ஆப்பூர் கிராமத்திற்கு மறு குடியமர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டு உள்ளனர். இது போன்ற முதல்கட்ட பணிகள் ஒன்றிரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்.
கூவம் ஆற்றை முதலிலும், பின்னர் அதனை தொடர்ந்து சென்னை நகரின் பிற முக்கிய நீர்வழிகளையும் சேர்த்து சீரமைக்கும் நோக்கத்துடன் தற்போது உள்ள அடையாறு பூங்கா அறக்கட்டளை, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என 22.01.2010-ல் மாற்றியமைக்கப்பட்டது. சென்னையிலுள்ள நதிகளை சீரமைப்புக்கும் திட்டங்களை உருவாக்கவும், திட்ட செயலாக்கம் மற்றும் திட்ட முன்னேற்றம் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டும், துணை முதல்–அமைச்சர் தலைமையில் குடிசைமாற்று வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சர்கள், மேயர் மற்றும் உயர் அதிகாரிகளை உறுப்பினர்களாக உயர் மட்டக்குழு 25.01.2010 அன்று அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளையின் முதலாவது கூட்டம் 8.02.2010 அன்று நடைபெற்றது. இந்த அறக்கட்டளையின் மூலம் சிங்கப்பூர் அரசை சார்ந்த சிங்கப்பூர் கூட்டு நிறுவனத்துடன் கூவம் ஆற்றை சீரமைக்க, மார்ச் மாதம் 18-ந் தேதி முதல்–அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலந்தாளுனரின் அறிக்கை, 5, 6 மாதங்களில் கிடைக்கும்.
கூவம் சீரமைப்பு பணியின் மொத்த மதிப்பீடு ரூபாய் 1,200 கோடியாகும். சிங்கப்பூர் நதியை சீரமைக்க 10 ஆண்டுகள் ஆகியது. சென்னை கூவத்தை சீரமைக்கும் பணி இன்னும் 5, 6 ஆண்டுகளில் முழுமையாக முடிவடையும்.
இவ்வாறு துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ராமசுந்தரம், துணை முதல்–அமைச்சரின் முதன்மை செயலாளர் கே.தீனபந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலாளர் பணிந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, இணை ஆணையர் ஆஷிஷ் சட்டர்ஜி, துணை மேயர் சத்யபாமா, மன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை பி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.