தினத்தந்தி 25.10.2013
வேலூர் மாநகராட்சி சார்பில் ரூ.6 கோடியில் சாலை சீரமைப்பு –கால்வாய் அமைக்கும் பணிகள் மண்டல குழு தலைவர் தகவல்
வேலூர் மாநகராட்சி சார்பில் ரூ.6 கோடி
மதிப்பில் சாலை சீரமைப்பு, கால்வாய் அமைக்கும் பணிகளை செய்ய
திட்டமிட்டுள்ளதாக மண்டல குழு தலைவர் தெரிவித்தார்.
விபத்துகளை தவிர்க்க…
வேலூர் மாநகராட்சியின் 4–வது மண்டலக்குழு தலைவர் அய்யப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:–
வேலூர் கோட்டை சுற்றுச்சாலை மற்றும்
பகுதிகளில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள்
நடைபெறுவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து அந்த சாலைகளை சீரமைக்க
திட்டமிடப்பட்டது. அதில் முதல் கட்டமாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. தற்போது கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள ரோடுகளை
சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் சின்ன அல்லாபுரம் பனந்தோப்பு,
எழில்நகர், சித்தேரி, இடையன்சாத்து மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட
புதிய பகுதிகளிலும் சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.6 கோடி மதிப்பில்…
வேலூர் மாநகராட்சியில் 4–வது மண்டலத்தில்
பல்வேறு பகுதிகளில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த
அடைப்புகளை நீக்கவும், தூர்வாரவும், புதிதாக கால்வாய்களை அமைக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணிகளை செய்ய சுமார் ரூ.6 கோடி செலவாகும்
என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நிதி 4–வது மண்டலத்தில் இல்லை,
எனவே மாநகராட்சியில் அதற்கான நிதியை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி
கிடைத்தும் மேற்கண்ட சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.
வேலூர் மாநகராட்சியுடன் புதிதாக
இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினையை
தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன் எச்சரிக்கை
அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல்
உள்பட மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில்
மழைநீர் தேங்கி நிற்கிறதா? என்பதை ஆய்வு செய்ய அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாகச்சென்று சோதனை நடத்தி
வருகிறார்கள்.
இந்த மண்டலத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் ஆங்காங்கே தேங்கி கிடக்கும்
குப்பைகளை அள்ள போதுமான வாகனங்கள் இல்லை. எனவே மாநகராட்சியிடம் 4
டிராக்டர்கள் கேட்டு பெறப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.