தினமணி 19.04.2010
மயிலாடுதுறை தொகுதியில் ரூ. 87 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
மயிலாடுதுறை,ஏப்.18: மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் 2010-11 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக சுமார் ரூ. 87 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜகுமார் தெரிவித்துள்ளார்.
கீழபட்டமங்கலம், வில்லியநல்லூர், மகாராஜபுரம், கொற்கை, பட்டவர்த்தி, ஆணைமேலகரம் உள்ளிட்ட 28 ஊராட்சிகளில் உள்ள 732 தொகுப்பு வீடுகளைப் பழுதுபார்க்க ரூ. 52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், வரதம்பட்டு ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளி, இளந்தோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணக்குடி ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மயிலாடுதுறை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சத்துணவுக் கூடம், தலைஞாயிறு, முருகமங்கலம், மொழையூர், மறையூர், குளிச்சார், முடிகண்டநல்லூர் ஆகிய 6 ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக்கழு கட்டடங்களும், தலைஞாயிறு, நீடூர், கடுவங்குடி, கிழாய், பட்டவர்த்தி ஆகிய 5 ஊராட்சிகளில் மயானக் கொட்டகையும், மயிலாடுதுறை நகர் 19- வது வார்டு பால்காரத்தெரு, புதுத்தெரு, 22- வது வார்டு தனியூர் வாணியத் தெரு, செருதியூர் ஊராட்சி எலுமிச்சம்பாத்தி காலனித் தெரு ஆகிய 4 இடங்களில் மினி பவர் பம்பும், நீடூர் ஊராட்சி காலனிதெரு, மயிலாடுதுறை திருவிழந்தூர் காமராஜர் சாலை, பல்லவராயன் பேட்டை ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை அமைப்பதற்கும் மற்றும் தலைஞாயிறு, கொற்கை ஆகிய ஊராட்சிகளில் ஈமக்கிரியை மண்டபம் அமைப்பதற்கும் நிதி செலவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.