தினகரன் 31.08.2012
ஆம்பூர் நகர காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிக்கு ரூ.15.87 கோடி ஒதுக்கீடு நகராட்சி தலைவர் தகவல்
ஆம்பூர், : ஆம்பூர் நகர குடிநீர் திட்டப்பணிகளுக்காக அரசு ரூ.15.87 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.ஆம்பூரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.சாமியார்மடம் பகுதியில் நடந்த விழாவில், நகராட்சி தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தலைமை தாங்கி, பூமி பூஜையை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம்பூர் நகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.15.87 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 32.75 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 40 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. அஸ்லம்பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆணையாளர்(பொறுப்பு) குமார், அதிமுக நகர செயலாளர் மதியழகன், ஆம்பூர் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.