நான்கு மண்டலத்திலும் “அம்மா உணவகம்’ ஈரோடு மாநகராட்சியில் விரைவில் துவக்கம்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் நான்கு இடங்களில், மலிவு விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும், “அம்மா உணவகம்’ விரைவில் திறக்கப்படும், என துணை மேயர் பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களை தொடர்ந்து, சிறு நகரங்களிம் உணவு பொருட்களின் விலை உயர்ந்தது.
குறைந்த பட்ச விலையாக இட்லி, 5 ரூபாய்யும், சாப்பாடு, 40 ரூபாய், கலவை சாதங்கள், 22 ரூபாயாக அதிகரித்தது. பெரு நகரங்களில் விலை சொல்லவே முடியாத அளவுக்கு உயர்ந்தது.
பொதுமக்கள் நலன் கருதி, சென்னை மாநகரில் யாரும் எதிர்பாராத விலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாப்பாடு என குறைந்த விலையில் உணவு வழங்கிட, மாநகராட்சி மூலம் உணவகங்களை திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.
ஒரு மாத காலத்தில சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தமிழகத்தின் மற்றபிற மாநகராட்சிகளிலும் திறக்கப்படும், என பட்ஜெட்டில் அறிவித்தார். இதனை அடுத்து, ஈரோடு மாநகராட்சியில் முதற்கட்டமாக முதல்வரின் அம்மா உணவகம் நான்கு இடத்தில் திறக்க முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி துணைமேயர் பழனிச்சாமி கூறியதாவது,
தமிழக முதல்வர் உத்தரவுபடி, குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம், மாநகராட்சியில் மண்டலங்கள் தோறும் தலா ஒரு கடை திறக்கப்படும். சூரியம்பாளையம் முதல் மண்டலத்தில் ஆர்.என்.புதூரிலும், பெரியசேமூர் மண்டலத்தில் சூளை பகுதியிலும், சூரம்பட்டி மண்டலத்தில், காந்திஜி ரோடு தீயணைப்புத்துறை அலுவலகம் அருகிலும், காசிபாளையம் நான்காவது மண்டலத்தில் கொல்லம்பாளையம் ஆட்டோ ஸ்டாண்டிலும் உணவகம் திறக்கப்படும்.
மேற்கண்ட பகுதியில் விசைத்தறி, கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் இங்கு திறக்கப்படுகிறது.
தொடர்ந்து வார்டுகள் தோறும் உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.