ரூ.11.60 கோடியில் புதிய குடிநீர் திட்டம் குழாய் அமைக்கும் பணி தீவிரம்
பள்ளிபாளையம்: ரூ.11.60 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள புதிய குடிநீர் திட்டத்தில், இறுதி கட்டமாக பொக்லைன் இயந்திரம் மூலம், “மெகா’ சைஸ் குழாய் அமைக்கும் பணி, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 11.60 கோடி ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.அதை தொடர்ந்து, சமயசங்கிலி காவிரி ஆற்றில், நீர் உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டது.
அங்கிருந்து, ஐந்து கி.மீ., தூரத்துக்கு, “மெகா’ சைஸ் குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று, அக்ரஹாரம் பம்பிங் ஸ்டேஷனில் சுத்திகரிப்பு செய்து, அங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு எடுத்துச் சென்று, பின்னர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.கடந்து மாதம் சோதனை பணி மேற்கொள்ளப்பட்டது. சமயசங்கிலி காவிரி ஆற்றில் இருந்து, அக்ரஹாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷன் வரை அமைக்கப்பட்டுள்ள மெகா சைஸ் குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறதா, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளதா என்பது குறித்து, 300 மீட்டர் தூரத்துக்கு ஒரு முறை, இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், திட்டத்தின் இறுதிக் கட்டப்பணியாக, “மெகா’ சைஸ் குழாய் பதிக்கும் பணி, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணி முழுமை அடைந்தால், தண்ணீர் வரத்து காலங்களில், பள்ளிபாளையம் நகராட்சி மக்களுக்கு தடையின்றி தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.