விளக்கு கம்பங்களில் விளம்பரப் பலகைகள்: அபராதம் விதிக்க முடிவு
தெருவிளக்குக் கம்பங்களின் வழியே செல்லும் கேபிள் டி.வி, இன்டர்நெட் வயர்கள் மற்றும் அதில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றாத தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
மாநகராட்சி மின்துறை ஊழியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலோசனை நடத்தினர்.
அப்போது தெருவிளக்குக் கம்பங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் கேபிள் வயர்கள் காரணமாக பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை என அவர்கள் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து விளக்குக் கம்பங்களில் விளம்பர பலகைகள், வயர்களை வைத்துள்ள நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. தெருவிளக்குக் கம்பங்களில் உள்ள பலகைகள், வயர்களை ஜூன் 10-ஆம் தேதிக்குள் அகற்றுமாறு ஏற்கெனவே மாநகராட்சி கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.