தினமணி 07.01.2014
நம்ம டாய்லெட் திட்டம்: குஜராத் அதிகாரிகள் பாராட்டு
தமிழக நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த்
பி.காம்ப்ளே வழிகாட்டுதலின் பேரில் வடிவமைக்கப்பட்டு, தாம்பரத்தில் அனைவரது
ஏகோபித்த பாராட்டை பெற்று செயல்பட்டு வரும் “நம்ம டாய்லெட்’ கழிப்பிட
திட்டத்துக்கு குஜராத் மாநில அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி, முடிச்சூர் பேரூராட்சியில்
சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை மற்றும்
பொதுசுகாதாரத் திட்டங்களை குஜராத் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர்
வி.திருப்புகழ், நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் மோனா காந்தார், ஆமதாபாத்
நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இயக்குனர் நரேஷ் ஆர்.ராஜ்புத் ஆகியோர்
பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
தாம்பரம் பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள நம்ம டாய்லெட்
கழிப்பறையின் வடிவமைப்பு, சுகாதாரத்துடன் பராமரிக்கும் முறை, வெளி
மாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டினரின் பாராட்டுக் குறிப்பு உள்ளிட்டவற்றை
அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் சேலையூர் பாரத் நகரில் 135 குடும்பத்தினர்
பயன்படுத்தி வரும் சமுதாய கழிப்பறைகளை அவர்கள் பார்வையிட்டு பாராட்டு
தெரிவித்தனர்.
பின்னர் முடிச்சூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் சமுதாய
கழிப்பறைகளையும் பார்வையிட்டனர். பின்னர் குஜராத் ஊரக வளர்ச்சித்துறை
செயலர் வி.திருப்புகழ் தினமணி செய்தியாளரிடம் பேசும்போது, நகர்ப்புறப்
பகுதிகளில் மனித கழிவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பொதுசுகாதாரம்
ஆகியவற்றை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வரும் திட்டங்களான நம்ம டாய்லெட்,
நம்ம சமுதாய சமையல்கூடம் ஆகியவை இங்கு பாராட்டத்தக்க வகையில் வெற்றிகரமாக
செயல்பட்டு வருவதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். இந்த
திட்டங்களை குஜராத்தில் செயல்படுத்துவது குறித்து முதல்வருடன் கலந்து உரிய
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாடு திட்ட மேலாண்மை இயக்குனர் மைதிலி
ராஜேந்திரன், கூடுதல் இயக்குனர் லட்சுமிபதி, நகராட்சிகள் நிர்வாக உதவி
பொறியாளர் வி.முருகேசன், தாம்பரம் நகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன்,
தாமஸ்மலை வட்டார வளர்ச்சி அதிகாரி மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் உடன்
இருந்தனர்.