மாலை மலர் 23.01.2014

சென்னை, ஜன. 23 – தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மனிதக்
கழிவுகளை பாதுகாப்பான முறையில் தீர்வு செய்வது பொது சுகாதாரத்தின் மிக
முக்கிய கூறாகும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள
கழிப்பறைகள் தேவையான எண்ணிக்கை இல்லாததாலும், போதுமான மற்றும் நல்ல
முறையில் பராமரிக்கப்படும் சுகாதாரமான பொதுக் கழிப்பிடங்கள் இல்லாததாலும்,
திறந்த வெளி கழிப்பிடங்கள் நீண்டகாலமாக தொடர்வது பொது சுகாதாரத்திற்கு
மிகுந்த சவாலாக உள்ளது.
எனவே 2015 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை
திறந்த வெளியில் மனிதக்கழிவு கழித்தல் இல்லாத மாநிலமாக உருவாக்க
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு உறுதி பூண்டு உள்ளது.
அதன்படி,
உள்ளாட்சி அமைப்புகளில் திறந்த வெளியில் மனிதக்கழிவு கழிக்கும் இடங்களை
கண்டறிந்து அங்கு புதியதாக கழிப்பிடங்களை ஏற்படுத்தல், பழுதான
கழிப்பிடங்களை மேம்படுத்திடல், தகவல், கல்வி மற்றும் விழிப்புணர்வு தீவிர
பிரச்சாரத்தின் வாயிலாக திறந்தவெளியில் மனிதக்கழிவு கழிப்பதை தவிர்க்கச்
செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான
அரசு எடுத்து வருகிறது.
2015–ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டில் பொது
இடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின்
அடிப்படையில் புதிய பொதுக் கழிப்பிடங்கள் அமைப்பதற்கும், தற்பொழுதுள்ள
கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி ஆகிய பணிகளுக்காக
கடந்த 2011-12 ஆம் ஆண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு,
முதற்கட்டமாக
19 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இதன் மூலம் 52
பேரூராட்சிகளில் 52 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு, 62
பேரூராட்சிகளில் 75 சுகாதார வளாகங்கள் புனரமைக்கப்பட்டன. அதேபோல்
மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 658 கழிவறைகள்
புனரமைக்கப்பட்டதுடன் புதியதாக 253 கழிப்பறைகள் கட்டப்பட்டன.
மேலும்
சென்ற ஆண்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பொதுக்
கழிப்பிடங்களை மேம்பாடு செய்வதற்காகவும், மற்றும் புதிய பொதுக்
கழிப்பிடங்களை கட்டுவதற்கும் 72 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.
மேலும்
2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாழடைந்த
நிலையில் இருந்த 12,796 மகளிர் சுகாதார வளாகங்கள், முதல்–அமைச்சர்
ஜெயலலிதாவின் உத்தரவுப்படி 170 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு
பெண்களுக்கான அடிப்படை சுகாதாரம் உறுதி செய்யப்பட்டது.
பெண்களுக்கு
மட்டுமின்றி, ஆண்களுக்கும் சுகாதார வளாகங்கள் அமைக்கவும் முதல்–அமைச்சர்
ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஒரு ஊராட்சி
ஒன்றியத்திற்கு இரண்டு ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் வீதம் 770 கிராம
ஊராட்சிகளில் 35 கோடி செலவில் அமைக்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே
உத்தரவிட்டார்.
மேலும் சுகாதார கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற
நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபர் இல்லக் கழிப்பறை அமைப்பதற்காக
மாநில அரசின் சார்பில் வழங்கும் அலகுத் தொகையினை 1,000 ரூபாயிலிருந்து
2,500 ரூபாயாக உயர்த்தியும், அதன் அடிப்படையில் 2012–13 ஆம் நிதியாண்டில் 4
லட்சத்து 56 ஆயிரத்து 901 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.
தமிழகத்தில்
2015–ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் திறந்தவெளி
மனிதக்கழிவு கழித்தல் அறவே ஒழித்திட வேண்டும் என்ற நோக்கத்தினை எய்தும்
வகையில், இந்த ஆண்டு மேலும் 10 கோடி ரூபாய் செலவில் 73 பேரூராட்சிகளில் 77
ஒருங்கிணைந்த நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.