தினமலர் 21.01.2010
இலவச தியான பயிற்சி துவக்க விழா
சென்னை : “”மாணவர்கள் கல்வியில் சாதிக்க, உடல் மற்றும் மன நலத்தைக் காப்பது அவசியம்,” என மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேசினார். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான இலவச மனதாய்வு மற்றும் தியான பயிற்சி துவக்க விழா, மேற்கு மாம்பலத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: வேதாந்த மகரிஷி ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற 100 மாநகராட்சி பள்ளி ஆசிரியர் கள் மூலம், அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் மனவலிமையை மேம் படுத்தும் வகையில், சன்மார்க்கா பவுண் டேசன்ஸ் சார்பில், இலவச மனதாய்வு மற்றும் தியான பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக, 10 மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இப் பயிற்சி தரப்பட உள்ளது. மாணவர்கள் கல்வியில் சாதிக்க, உடல் மற்றும் மன நலத்தைக் காப்பது அவசியம். மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரம் மாணவர்களுக்கு, தலா 165 ரூபாய் மதிப்பில் இலவச அகராதியும், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை, பை மற்றும் காலணிகளும் இம்மாதத்திற்குள் வழங்கப்படும். இவ்வாறு சுப்ரமணியன் பேசினார். விழாவில், மாநகராட்சி துணை மேயர் சத்தியபாமா, ஆணையர் ராஜேஷ் லக்கானி, சன்மார்க்கா பவுண்டேசன்ஸ் நிறுவனர் சங்க மித்ரா அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.