தினமணி 15.08.2009
இலந்தைகுளத்தில் பொழுது போக்கு பூங்கா: உயர்நிலைக் குழு ஆய்வு
திருநெல்வேலி, ஆக. 14: பாளையங்கோட்டை இலந்தைகுளத்தில் பொழுது போக்கு பூங்கா அமைப்பது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் உயர்நிலைக் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது.
பாளையங்கோட்டை இலந்தைக்குளத்தில் பொழுது பூங்கா அமைப்பது, நேரு சிறுவர் கலையரங்கில் பல்நோக்கு கலையரங்கு அமைப்பது என திருநெல்வேலி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி சென்னையில் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டலாலினை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மண்டலத் தலைவர்கள் எஸ். விஸ்வநாதன், சுப. சீத்தாராமன், எஸ்.எஸ். முகம்மது மைதீன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது இந்த இரு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் அந்த இரு திட்டங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டது.
இதன் காரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் துணைத் தலைவர் ஆர். காயத்ரி, ஆலோசகர் எஸ். விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்தது.
இக் குழுவினர் இலந்தைக்குளத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் நேரு சிறுவர் கலையரங்கையும் ஆய்வு செய்தனர்.
இலந்தைக்குளத்தில் சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்று அமைக்க திட்டமிட்டு வருவதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.
பின்னர் அந்த குழுவினர் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் அ.லெ. சுப்பிரமணியன், பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் சுப. சீதாராமன், ஆணையர் த. மோகன், மாநகர பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவி ஆணையர் சுல்தானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.