தினகரன் 21.10.2010
சிவகாசி நகராட்சியில் ரூ.44 லட்சம் மதிப்பில் எரிவாயு தகன மேடை
சிவகாசி, அக். 21: சிவகாசி நகராட்சியில் பயோ காஸ் மூலம் எரியூட்ட வசதியாக எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
சிவகாசி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தின் அருகே எரிவாயு தகன மேடை ரூ.44லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. கிரானைட் கற்களால் ஆன தரைதளத்தில் நவீன கருவிகளும், அதிக நீளம் கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட புகைபோக்கியுடன் இந்த எரிவாயு மயானம் அமைக்கப்படுகிறது.
400 டிகிரி வெப்பநிலையை உருவாக்கி உடலினை எரியூட்டும் வகையில் இந்த தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 7மணி முதல் மாலை 6மணி வரை செயல்பட உள்ள இந்த மயானத்தில் ஒருவரது உடலை சுமார் 45நிமிடத்தில் எரியூட்ட முடியும். இதிலிருந்து வெளியேறும் புகை இங்குள்ள புகை போக்கி மூலம் 100அடி உயரத்தில் வானில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தியான மேடை, பார்க்கிங் வசதி, போகஸ் விளக்கு, புல்வெளி உள்ளிட்ட வசதிகளும் இந்த எரிவாயு தகன மயானத்தில் அமைக்கபட்டு வருகின்றன. பணிகள் முடிந்த உடன் விரைவில் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.